×

தற்கொலை செய்வதற்கு முன் மூத்த மகளையும் செல்போனில் பேசி ஊருக்கு அழைத்த பெண் கவுன்சிலர்

*‘ரோஸ்மில்க் கசக்குது அக்கா…’ தங்கையின் கடைசி பேச்சு

ராசிபுரம் : ராசிபுரத்தில் கணவர், மகளுடன் தற்கொலை செய்து கொண்ட பெண் கவுன்சிலர், தற்கொலை செய்வதற்கு முன் மூத்த மகளிடம் செல்போனில் பேசி ஊருக்கு அழைத்துள்ளார் அவருக்கு விடுமுறை கிடைக்காததால் பணம் அனுப்பி உருக்கமாக பேசியுள்ளார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பொம்மி தெருவைச் சேர்ந்தவர் அருண்பிரகாஷ் லால் (54). திமுக நகர துணை செயலாளரான இவர், கடைவீதியில் நகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி தேவிபிரியா(43), 13வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்தார். இவர்களின் மூத்த மகள் ரித்திகாஸ்ரீ(22) பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இளையமகள் மோனிகாஸ்ரீ(16) பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை அருண்பிரகாஷ் லால், தேவிபிரியா ஆகியோர் வீட்டில் தூக்கிட்டும், மோனிகாஸ்ரீ விஷம் அருந்தியும் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களது சடலத்தை கைப்பற்றிய ராசிபுரம் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ரித்திகாஸ்ரீயிடம் போலீசார் விசாரித்த போது, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மூத்த மகள் ரித்திகாஸ்ரீயுடன் போனில் பேசி ஊருக்கு வருமாறு கூறியுள்ளார். அவர் தனக்கு விடுமுறை கிடைக்காது என தெரிவித்துள்ளார். தொடர்ந்து இரண்டுநாளாக ஊருக்கு அழைத்த அவர் மகள் விடுமுறை இல்லை எனக்கூறியதும், நேற்று முன்தினம் இரவு மறுபடியும் ரித்திகாஸ்ரீக்கு போன் செய்துள்ளார். அப்போது, பணம் அனுப்பியுள்ளேன். நீ பத்திரமாக வைத்துக்கொள். உன்னை நீதான் பார்த்துக்கொள்ளணும், நீ நல்லா இருக்கனும் என தெரிவித்துள்ளார்.

பின்னர், மோனிகாஸ்ரீ தனது அக்காவிடம் பேசியபோது, நான் ரோஸ்மில்க் குடித்தேன், கசப்பாக இருந்தது என சொல்லும் போது, தேவிபிரியா மோனிகாஸ்ரீயிடம் இருந்து போனை பறித்துள்ளார். எங்களுக்கு கசக்க வில்லை; உனக்கு மட்டும் தான் கசக்குதா என கூறி விட்டு, போனை மகளிடம் இருந்து பறித்துள்ளார். இதனை மூத்த மகள் விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

மகளுக்கு ரோஸ்மில்க் கொடுத்த பிறகு தேவிபிரியா, அருண்பிரகாஷ் லால் ஆகியோரும், விஷம் கலந்த ரோஸ் மில்க்கை குடித்துள்ளனர். மோனிகாஸ்ரீ இறந்து விட்டதால், நாம் ஒருவேளை பிழைத்துக் கொள்வோமோ என நினைத்து, இருவரும் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தற்கொலை செய்வதற்கு முன் மூத்த மகளையும் செல்போனில் பேசி ஊருக்கு அழைத்த பெண் கவுன்சிலர் appeared first on Dinakaran.

Tags : Rosemilk Kasakkudu Aka ,Staddy ,Rasipuram ,Razipuram ,
× RELATED நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே...